தஞ்சை மாவட்டத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ன் மூலம் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து வட்ட அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இத்தொலைபேசி எண்ணை நேற்று தொடர்பு கொண்டபோது எண் தவறானது எனவும், பயன்பாட்டில் இல்லை எனவும் குரல் வந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எப்படி தெரிவிப்பது என்பது புரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.